×

2 தெருநாய்களை நாட்டு வெடிகுண்டு வைத்து கொன்றவர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல் வீட்டிற்குள் நுழைந்து உணவை சாப்பிட்ட

குடியாத்தம், ஜன.9: குடியாத்தம் அருகே வீட்டிற்குள் நுழைந்து உணவை சாப்பிட்ட 2 தெருநாய்களை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(45). இவரது வீட்டிற்குள் அடிக்கடி நுழையும் தெருநாய்கள், வீட்டில் சமைத்து வைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த பாலாஜி, அந்த நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, இருதினங்களுக்கு முன்பு இரவு நாட்டு வெடிகுண்டு வாங்கி வந்து, அதனை அசைவ உணவில் கலந்து தனது வீட்டின் வெளியே வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வந்த 2 தெருநாய்கள் அவற்றை கவ்வி சிறிது தூரம் சென்றபோது, திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில், 2 நாய்களும் உடல் சிதறி பலியானது. பின்னர், பாலாஜி இறந்த நாய்களின் உடல்களை அதே பகுதியில் புதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக இருந்த பாலாஜியை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று குடியாத்தம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் பாலாஜியை அவரது வீட்டில் கைது செய்தனர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

The post 2 தெருநாய்களை நாட்டு வெடிகுண்டு வைத்து கொன்றவர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல் வீட்டிற்குள் நுழைந்து உணவை சாப்பிட்ட appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Thanakondapalli village ,Kudiattam, Vellore district ,Dinakaran ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லர்...